வாழ்த்துரை
தொல்புரம் கிழக்கு விக்னேஸ்வரா சனசமூக நிலையம் சமூகச்சுடர் எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிடுவதையிட்டு எனது பராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இச்சஞ்சிகைக்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்வடைகிறேன்.
சனசமூக நிலையம் என்பது கிராமத்தின் சமூக மேம்பாட்டிற்காகவும் சமூகத்தினை நல்வழிப்படுத்தவும் முன்னின்று உழைக்கும் ஒரு ஸ்தாபனம் ஆகும்.அந்தவகையில் விக்னேஸ்வரா சனசமூக நிலையமும் சமூகத்திற்கு தொண்டாற்றிவருவது பாராட்டத்தக்கதாகும்.தற்போது வெளியிடப்படும் சமூகச்சுடர் சஞ்சிகையின் மூலம் மேலும் பலர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறான சஞ்சிகைகளை வெளியிடுவதன் மூலமாக இளைஞர்களிடம் உள்ளடங்கியிருக்கும் ஆற்றல்கள் வெளிக்கொணரப்படுவதுடன் சமூகத்திற்கிடையே ஒரு பகிர்வு ஏற்படுத்தப்படுகின்றது.எல்லோருக்கும் சமூக அறிவு கிடைக்கப்பெறுகின்றது.
எனவே இவ்வாறான சஞ்சிகைகள் ஆண்டுதோறும் வெளிவரவேண்டும் என்பதுடன் சமூக அபிவிருத்திக்காக இவை பங்காற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.விக்கினேஸ்வரா சனசமூக நிலையம் மேன்மேலும் சமூக அபிவிருதியில் ஈடுபட்டு உயர்வடைய வேண்டும் என வாழ்த்துவதுடன் இச்சமூகச்சுடர் சஞ்சிகை மூலம் அனைவரும் பயன்பெற வேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன்.
நன்றி
வலிமேற்கு- சங்கானை
வாழ்த்துரை
தொல்புரம் கிழக்கு விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றைய சனசமூக நிலையங்களுக்கு முன்மாதிரியாக மிகச் சிறந்த முறையில் திறம்படச் சேவையாற்றி வருவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கலை,கலாசார விழாக்கள்,விளையாட்டுப் போட்டிகள்,சமய நிகழ்ச்சிகள்,சிறுவர்களுக்கான கல்வி,சிறந்த வாசிகசாலை,சிரமதானம் போன்ற பல்வேறு சேவைகளையும் அப்பகுதி மக்களுக்கு ஆற்றிவரும் வேளையிலே "சமூகச்சுடர்" எனும் கலை,இலக்கிய சஞ்சிகையை வெளியிடுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தினர் தொடர்ந்தும் இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழின் வளர்ச்சிக்கும் சமய முன்னேற்றத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பங்காற்ற வேண்டும் எனக் கூறிக்கொண்டு இச்சஞ்சிகைக்கு வாழ்த்துரை வழங்க சந்தர்ப்பம் அளித்த நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
நன்றி
திருமதி.கே.சிவசோதி
சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்,
உள்ளூராட்சித் திணைக்களம்,
யாழ்ப்பாணம்